2019க்கு முன் பெறப்பட்ட சிம் அட்டைகள் மீள்பதிவு – அமைச்சரவை அனுமதி.!
2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீண்டும் பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதியிட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்துகின்றன. எனினும், அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட பல வாடிக்கையாளர்களின் முழுமையான தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லாததால், குற்றச்செயல்கள் தொடர்பான சட்டப் புலனாய்வுகளில் துல்லியமான தகவல்களை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனை முன்னிட்டு, 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன் பெறப்பட்ட அனைத்து சிம் அட்டைகளின் உரிமையாளர் விவரங்களும் முறையாக மீள்பதிவு செய்யப்படவுள்ளன.மேலும், இதுவரை முறையாக பதிவு செய்யப்படாத 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக பதிவு செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அதேபோல், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகள் வழங்கும் நடைமுறைகளிலும் புதிய ஒழுங்குகள் அமல்படுத்தப்படவுள்ளன.டிஜிட்டல் பொருளாதார அமைச்சராகிய ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.