“இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறினால் அரசு நிராகரிக்கப்படும்” –பியால் நிஷாந்த எச்சரிக்கை.!
“நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரின் கௌரவத்தைப் பேணத் தவறியுள்ள தற்போதைய அரசை மக்கள் விரைவில் நிராகரிப்பார்கள்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களையும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரத்தையும் முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இன்று இந்த நாடு மயான நிலமாகவோ அல்லது இரத்தப் பேரழிவாகவோ மாறாமல் இருப்பதற்கு காரணம் எமது இராணுவத்தினரும், அவர்களுக்கு தலைமை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆவர். அவர்கள் அமைத்த அடித்தளத்தினாலேயே நாடு இன்று இந்நிலையை எட்டியுள்ளது.ஆயினும், தற்போதைய அரசு இராணுவத்தினரை உரிய மரியாதையுடன் அழைக்கத் தயங்கி, அவர்களை ‘சிப்பாய்கள்’ என மட்டுப்படுத்திப் குறிப்பிடுவது கவலைக்குரியது.இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் பணிகளையும், எமது படைவீரர்களின் தியாகங்களையும் சர்வதேச அளவில் எடுத்துரைக்க அரசாங்கம் முன்வரவில்லை.”மேலும் அவர் கூறுகையில்,
“இராணுவத் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் கடன் அல்லது உதவித் திட்டங்களின் கீழ் பெறப்பட்டவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறெனில், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சகங்களில் உள்ள பல பௌதீக வளங்களும் அதே முறையில் பெறப்பட்டவையே. அவற்றையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமா?அரசில் உள்ள சிலர் தமது இயலாமையை மறைக்க அநாவசியமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இது மக்களின் அதிருப்தியை அதிகரிக்கிறது.
“அப்பாவி மக்களின் ஆதரவால் ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தத் தவறினால் விரைவில் நிராகரிக்கப்படுவார்கள். இராணுவத்தினருக்கும் மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாடு முன்பு எப்போதும் இல்லாத அபாயகரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும்” என அவர் எச்சரித்தார்.