கூட்டுறவு விற்பனை நிலையங்களில் 10,000 ரூபாவிற்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு கிடைக்கவுள்ள நன்மை.!
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் காப்புறுதி நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும். அது மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கூட்டுறவு ஊழியர்களுக்குத் திருப்திகரமான சம்பளம் மற்றும் ஆயுள் காப்புறுதி உள்ளிட்ட வசதிகளை வழங்கி, இந்தக் கூட்டுறவு இயக்கத்தைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலதிகமாக கருத்துத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க,
“கூட்டுறவு இயக்கத்தை ‘திசைகாட்டி’யின் பாரிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வருகிறோம். அதன் ஊடாக ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு ‘கோப் சிட்டி’யை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.
அத்துடன் நகரப் பகுதிகளில் பாரிய கோப் சிட்டிகளைப் பராமரித்துச் செல்வதற்குத் தேவையான கடன் தொகையை, குறைந்த வட்டியின் கீழ் வழங்க நடவடிக்கை எடுப்போம்,” என்று கூறினார்.