திருகோணமலை சனீஸ்வரன் ஆலய உரிமை விவகாரம்: பெண் ஒருவர் கூறிய கருத்தால் பரபரப்பு.!
திருகோணமலை சனீஸ்வரன் ஆலயத்திற்கு இன்று (07) காலை வருகை தந்திருந்த பெண் ஒருவர், குறித்த ஆலயம் தங்களுடையது எனக் கூறியமை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மரத்தடி பகுதியைச் சேர்ந்த சிட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே, இரு பௌத்த பிக்குகளுடன் ஆலயத்திற்கு வருகை தந்து இவ்வாறு தெரிவித்ததாக அறியப்படுகிறது.
அவர், சனீஸ்வரன் ஆலயம் தங்களது பரம்பரை வழிபாட்டு தலமாகும் என்றும், தாம் தலைமுறைகள் தோறும் இவ்விடத்தில் வழிபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, ஆலய நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி ஆலயத்தின் உட்பகுதியில் சிட்டி விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், அவருடன் வந்திருந்த இரு பிக்குகள் அங்கு சிட்டி எரித்து வழிபாடு மேற்கொண்டதுடன், தாம் கொண்டு வந்திருந்த கதிரைகளில் அமர்ந்து சிறிது நேரம் தங்கியிருந்து பின்னர் எதுவும் கருத்து வெளியிடாது சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆலய வளாகத்திற்குள் தனியாரால் சிட்டி விற்பனை செய்வதற்கு முன்பே ஆலய நிர்வாகம் தடை விதித்திருந்ததாகவும், அதனை மீறியே குறித்த பெண் விற்பனைச் செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகமும் பிரதேச மக்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.