நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணல்ல – உயர்நீதிமன்றம் தெரிவிப்பு.!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம், அரசமைப்புக்கு முரணானதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன் காரணமாக, குறித்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி அரசு முன்னதாக உறுதியளித்திருந்தது. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதியுடன் குறித்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.இச்சட்டமூலத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், தனது தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சட்டமூலத்தில் உள்ள எந்த விதிகளும் அரசமைப்பின் விதிகளை மீறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.