இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது.!
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல தரப்பினருடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்வினை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்குள் மாகாண சபைத் தேர்தலையும் உள்ளடக்குங்கள். அப்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.