வாவிக் கரையில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்பு.!
நுவரெலியா கிரகரி வாவிக் கரையில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் உயிர்காப்புப் பொலிஸார் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் ஆரம்ப விசாரணைகள் மற்றும் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த சடலம் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதுடன் சிசுவின் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதன் அடிப்படையில் குறித்த பிரசவம் வைத்தியசாலையில் இடம்பெறவில்லை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.