வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்; முன்வந்துள்ள புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர்.!
வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ. ஜெயசேகரம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய, வாழ்வாதார சவால்களை எதிர்கொண்ட சுமார் 1,000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருத்தமான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளன.கடந்தகால போர்சூழ்நிலையும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தமும் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்கப்படுகின்றது.
இதன் மூலம் அவர்களது குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள் மற்றும் சரசீஜா ராமன் ஆகியோர் வழங்க முன்வந்துள்ளனர்.முதல் உதவி நடவடிக்கை கிளிநொச்சியில் நடைபெறும்; அதன் பிறகு முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கும் இதே வகையில் வழங்கப்படவுள்ளது.