முடிவுக்கு வந்ததுவிமலின் போராட்டம்- இது அரசியல் நாடகம் என்று கடும் விமர்சனம்!
தரம் 6 இற்கான கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்த முடிவையடுத்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று மாலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சுப் பதவியைப் பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலை ஆரம்பித்திருந்தார்.
பிரதமர் ஹரிணி மீது கடும் விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார். அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவராகப் பிரதமர் செயற்படுகின்றார் என்று அவர் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருந்தார்.
ஐ.நாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் நகைச்சுவையாளராக மாறிய விமலின் இந்தப் போராட்டமும் அரசியல் நாடகம் என்று சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
நேற்றிரவு 11 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து விமல் வீரவன்ச வெளியேறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் வந்து போராட்டத்தில் இணைந்திருந்தார். தமது இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் என அவர் சூளுரைத்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் விமல் வீரவன்ச, அவர் களமிறங்கும் அணியில் முதல் இரு இடங்களுக்குள் விருப்பு வாக்குகளைப் பெறுவார். ஆனால், அரசியல் மாற்றத்தையடுத்து அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
தற்போது பிரதான கட்சிகளுடன் அவர் தரப்பு கூட்டணி உறவையும் பேணவில்லை. அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்த நிலையில், பாலஸ்தீனம் தொடர்பில் பாடலொன்றை எழுதி இருந்தார் விமல் வீரவன்ச.பிறகு அவ்வப்போது ஊடகங்கள் முன் தலைகாட்டுவார். தையிட்டி பிரச்சினையை அடுத்து களத்துக்கு வந்த அவர், தற்போது பிரதமருக்கு எதிரான போராட்டத்தை முழு வீச்சுடன் கையில் எடுத்துள்ளமை அரசியல் இருப்புக்கான போராட்டம் என விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், “தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய மீளாய்வின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதையடுத்து விமல் வீரவன்ச தாம் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று மாலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்
.
