உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தமிழரசு – சங்கு அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய விசேட தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான யோசனை அரசால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலை இழுத்தடிப்பதற்கான இந்த முயற்சியை உரியவாறு கையாண்டு, இவ்வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடாத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது குறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பது என்பது மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பயந்த அரசு, அதனை உடன் நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சி மாத்திரமேயாகும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

மறுபுறம் கடந்த வியாழக்கிழமை தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, அரசாங்கம் வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சி குறித்தும், அதனை முறியடித்து மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படும் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடத்துவதா? என ஆராய்வதற்காகவே அரசு தெரிவுக் குழுவை நியமிக்கின்றது. அக்குழு புதிய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தீர்மானித்தால், அதன் பின்னர் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கு ஓரிரு வருடங்கள் தேவைப்படும்.

எனவே, இவ்வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது. எனவே அடுத்த வாரம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது இது பற்றி விரிவாக ஆராய்வோம்.” – என்றார்.

அதேவேளை இது பற்றிக் கருத்துரைத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், “தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பில் பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படாத போதிலும், விசேட தெரிவுக்குழுவை நியமிக்கும் அரசின் முயற்சி குறித்து நிச்சயமாகப் பேசப்படும்.” – என்றார்.

“மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாமல் இழுத்தடிக்கும் நோக்கிலேயே தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கின்றது என்ற விடயம் தமிழரசுக் கட்சிக்கும் தெரியும். தற்போது 3 மாத கால அவகாசத்துடன் நிறுவப்படும் தெரிவுக் குழுவின் கால அவகாசம் பின்னர் மேலும் நீடிக்கப்படும்.

அரசு உண்மையிலேயே மாகாண சபை முறைமையில் ஈடுபாடு கொண்டிருப்பின், தற்போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி, பழைய முறைமையில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

அதன் பின்னர் அடுத்த தேர்தல் வரையான காலப்பகுதியில் எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து, தேர்தலைக் காலதாமதப்படுத்துவதற்கு இவ்வாறான தெரிவுக்குழுவை நியமிக்கக்கூடாது.” – என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

18 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

61 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

51 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0