மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்கக் கோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தின் ஏனைய மருத்துவமனையில் பணியாற்றும் தாதியர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அரச தாதியர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் செ.விஜயதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தாதிய உத்தியோகத்தர்கள் தொழில் சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும் இல்லாத ஒரு செயற்பாட்டினை வடமாகாணத்திற்குள் மட்டும் வடமாகாண சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தல்படி 50 ஊழியர்கள் கொண்ட இடங்களில் அனைவருக்கும் பொதுவாக ஒரு கையெப்பமிடும் புத்தகத்தினை பாராமரிக்குமாறு பணித்துள்ளார்.
இதனை நடைமுறைப்படுத்தாத சந்தர்ப்பத்தில் மேலதிக நேரக்கொடுப்பனவு உட்பட்ட விடயங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த விடயம் தாதிய உத்தியோகத்தர்களை பாதித்துள்ளது.
இது தொடர்பில் வடமாகாண தாதிய உத்தியோகத்தர் தொழில் சங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அடையாள தொழிற்சங்க நடவடிக்கையாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாதிய உத்தியோகத்தர்களின் கோரிக்கை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள நடைமுறையினை வடமாகாணத்திற்குள்ளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு இன்று சென்ற நோயாளர்களை மருத்துவமனையின் ஏனைய சிற்றூழியர்களை வைத்து மக்களின் மருத்துவ சேவையினை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.













