முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவுக்குமான புதிய சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்று(12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பல நாட்களாக முல்லைத்தீவு கொழும்புக்கு இடையிலான சொகுசு பேருந்து சேவை இல்லை என்ற விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததன் அடிப்படையிலே தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி பெற்று இன்று முதல் ரத்னா ரவல்ஸ் (Rathna Travels) தனது சொகுசு பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்று (12) காலை 8:30 மணிக்கு கொழும்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவுக்கான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற அதே வேளையிலே இன்று இரவு 10 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இதன் அடிப்படையில் இன்று இரவு 9:30 மணிக்கு புதுக்குடியிருப்பில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கின்ற குறித்த பேருந்து சேவை முல்லைத்தீவு நகரத்திற்கு சென்று அங்கிருந்து 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.
குறித்த பேருந்து சேவையானது புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு – முள்ளியவளை – ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி- புளியங்குளம் – வவுனியா – தம்புள்ளை – குருநாகல் – கொழும்பு வழித்தடத்தில் இடம்பெற உள்ளதோடு ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ள 0770417476, 0770607476, 0707417476 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றுகின்ற வைத்தியத்துறை மற்றும் ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொது மக்களும் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களிலும் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதோடு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் இந்த சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











