ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா வலிமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அந்த நீரிணையில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இதற்கு தெஹ்ரான் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.
கெஷ்ம் தீவு, பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் சிதறிய உலோகத் துண்டுகளால் மக்கள் காயமடைந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குக் காரணமான அந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு, ஈரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.
அந்த 60 சிறிய படகுகள் தவிர, ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் (Centcom) தெரிவித்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்த மேலதிக விவரங்களை அது வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்பு, கடந்த மாதம் வொஷிங்டனும் தெஹ்ரானும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான எண்ணெய் தடைகளைத் தற்காலிகமாக நீக்கியிருந்த விலக்கை அமெரிக்க திறைசேரி இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.










