சசெக்ஸ் இளவரசர் ஹாரி ஒரு வார கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்பியுள்ளார்.
காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக அவரே தொடங்கிய ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ (Invictus Games) அறக்கட்டளை நிகழ்வுடன் அவரது லண்டன் பயணம் தொடங்குகிறது.
பாதுகாப்புக் காரணங்களால் அவரது மனைவி மேகன் (Meghan) மற்றும் குழந்தைகளான ஆர்ச்சி, லிலிபெட் ஆகியோர் லண்டன் வரவில்லை என்பதால், இளவரசர் ஹாரி தனியாகவே இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
இளவரசரின் இந்த வருகை ஆரம்பத்திலேயே ஒரு குழப்பத்துடன் தொடங்கியுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதற்கான அழைப்பை இளவரசர் ஹாரி ஏற்றுக்கொண்டதாக அவரது தரப்பு முதலில் அறிவித்தது.
ஆனால், இதனை அரண்மனை நிர்வாகம் உடனடியாக மறுத்துள்ளது.
இளவரசர் ஹாரி தங்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்காததால், அவர் அரண்மனையில் தங்க முடியாது என்ற விபரம் கடந்த சனிக்கிழமையே அவரிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அரண்மனை தரப்பு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










