வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வேலைத்திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன், திக்கம் பகுதியில் பனங்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் மற்றும் பனைப்பொருட்கள் தயாரிப்பில் விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், வல்வெட்டித்துறை பகுதியில் கரையோர பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் நகர சபை சட்டங்களை மீறி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்ட மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலர் தலைமையிலான அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










