அரசுக்கு எதிராக எழும் மக்களின் போராட்டக் குரலை நசுக்கும் உள்நோக்கத்துடனேயே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது உரையாற்றிய அவர், அரசின் இந்த நடவடிக்கைக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்குப் பின்னணியில் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் அடக்குமுறை நோக்கமே காணப்படுகின்றது. மக்களின் உண்மையான கோரிக்கைகளைச் செவிமடுப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒடுக்குவதற்கே அரசு இச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றது.
தற்போது இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாகப் பிரதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வந்த மக்கள் விடுதலை முன்னணியினர், தற்போது எரிபொருள் வரிசையைக் கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்கவும் இச்சட்டம் அவசியம் என்பது போலப் பேசுவது வியப்பளிக்கின்றது.
மக்களுக்கு முறையான சேவைகளை வழங்க அவசரகாலச் சட்டம் அவசியம் இல்லை. அரசின் மீதான மக்கள் எதிர்ப்பைத் திசைதிருப்பவே இச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயக ரீதியிலான குரலை ஒடுக்குவதற்காக அரசு எடுத்துள்ள இந்த முடிவை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.” – என்றார்.










