கூலிப்படை வைத்து மாமியார் மீது மருமகள் வாள்வெட்டுத் தாக்குதல்.!
கற்கோவளம், பருத்தித்துறையை சேர்ந்த திருமதி. பாலபாரதி நிர்மலா எனும் 65 வயதுடைய வயோதிபப் பெண் மீது நள்ளிரவு 12:30 மணியளவில் மூன்று பேரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் குறித்த வயோதிபப் பெண்ணின் மகனிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பழி தீர்க்கும் வகையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண் அவரது கணவருடன் வீட்டில் தனித்து இருந்த நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்த மூவர் குறித்த பெண்ணை சரமாரியாக வாளினால் வெட்டியதுடன் அவரது கணவனை மார்பில் காலால் உதைத்து தாக்கி குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாதவாறு 2 மணி நேரம் வாசலில் வழிமறித்து காவல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் பொலிஸிற்கு தகவல் வழங்கியும் பொலிஸார் வராத நிலையில் தனியார் வாகனமும் வர அனுமதிக்காததால் அம்புலன்ஸ் வண்டி மூலம் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் அவரது மகனின் மனைவியான நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்பித்து வரும் ஜனார்த்தனன் கார்த்திகா மற்றும் அவரது சகோதரரானா லண்டன் கள் எனும் இடத்தில் வசித்து வரும் ஜெயதேவன் தாயகரன் ஆகியோரால் கூலிப்படையை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாள்வெட்டுத் தாக்குதலினை தாயகரன் என்பவரது நண்பனான பருத்தித்துறை சுப்பர்மடத்தை சேர்ந்த அனோஜ் என்பவருடன் மேலும் இருவர் சேர்ந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தும் 6 மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் உயரதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.