கரைவலைத் தொழிலில் கனரக உழவு இயந்திரப் பயன்பாட்டை தடை செய்யுமாறு அமைச்சரிடம் கோரிக்கை.!
தடைசெய்யப்பட்ட கனகர உழவு இயந்திரம் (வீஞ்சி) மற்றும் இழுவை இயந்திரம் பயன்பாட்டின் மூலம் கரைவலை மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்குமாறு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களிடம் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் நேரில் மஜகர் ஒன்றை வழங்கியுள்ளனர்.
அந்த மஜகரில், கரைவலை மீன்பிடித் தொழில் என்பது மனித வலுவை மட்டுமே பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பாரம்பரிய தொழிலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டுச் சட்டத்தின் படி, இயந்திரம் பொருத்தப்படாத படகுகள் மூலம் வலை விரிக்கப்பட்டு, கரையில் உள்ள இரு குழுக்களால் கைகளின் உதவியுடன் படிப்படியாக இழுத்து கரைக்கு கொண்டுவரப்படுவது வழமையான நடைமுறையாகும்.
ஆனால் தற்போது இழுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வலைகள் விரிக்கப்படுவதால், கரைவலைத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்ட முறையாக மாறி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனிதர்களால் விரிக்கப்படும் அளவை விட அதிக தூரத்திற்கு வலை விரிக்கப்படுவதால் கடல்வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, சிறு தொழில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களின் தொழில் உபகரணங்கள் சேதமடைவதுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், இழுவை இயந்திரம் பயன்பாடு தனி முதலாளித்துவத்திற்கு ஆதரவாக அமைவதுடன், பெரும்பான்மையான சிறு தொழில் மீனவர்களுக்கு குறைந்தளவிலேயே நன்மை கிடைப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கரைகளில் இழுவை இயந்திரம் மூலம் வலை இழுப்பது மண்ணரிப்பை அதிகரிக்கக் காரணமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரும்பான்மையான சிறு தொழில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் கரைவலை மீன்பிடித் தொழிலை பாரம்பரிய முறையிலேயே நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறு மஜகரில் பணிவுடன் கோரப்பட்டுள்ளது.