வட மாகாணத்தில் அரச, தனியார் போக்குவரத்தில் பாரிய மாற்றம்.!
வட மாகாண பகுதிகளில் அரச, தனியார் போக்குவரத்து சேவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு தரமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து என்பது நாட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ள ஒரு விடயமாக காணப்படுகின்றது. போக்குவரத்து உரிய முறையில் இருந்தால் மாத்திரமே பொருளாதாரமும் வெகுவாக வளர்ச்சியடையும்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது போக்குவரத்து அமைச்சர் ஊடாக பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.
அமைச்சர் நேரடியாக விஜயங்களை மேற்கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை நான் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றேன்.
வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச, தனியார் போக்குவரத்தில் பாரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்கும் முகமாக பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
தரமான போக்குவரத்து சேவை ஒன்றை முன்னெடுக்க ஜி.பி.எஸ் மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அரச தனியார் போக்குவரத்தில் புதிய திட்டங்களும் அமுல்படுத்தப்பட உள்ளது.
27 சங்கங்கள் வட மாகாணத்தில் இயங்கி வரும் நிலையில் ஒவ்வொரு சங்கங்களும் தனியான யாப்பின் அடிப்படையில் இயங்கி வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாண போக்குவரத்துக்கான தனி யாப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.