ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இரு பொலிஸ் அதிகாரிகள் கைது.!
கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடானது, கடந்த சனிக்கிழமை இரவு (14) இடம்பெற்றிருந்த நிலையில் மன்னாரை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கடமை தவறியதற்காக நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிகை அலங்கார நிலையமொன்றை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த எனப்படும் புளூமெண்டல் சங்க என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி – வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவ தினம் சிகை அலங்கரிப்புக்கு சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.