மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி.!
இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்பாடுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பதிலுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் 17.02.2026 இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டு வார கால அவகாசத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.
குறித்த மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 22.08.2025 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் கடந்த 02.12.2025 அன்று நாடாளுமன்ற சபை அமர்வில் குறித்த கேள்விக்கான பதில் வழங்கப்படுமென நாடாளுமன்ற அறிவித்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் அப்போது “டித்வா” அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் குறித்த தினத்தில் இந்தக் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இத்தகைய சூழலில் குறித்த கேள்விகள் 17.02.2026 இன்று நாடாளுமன்ற சபை அமர்வில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவாரம் கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் துறைசார்ந்த அமைச்சர்களிடம் கேட்பதற்கென 30 கேள்விப்பத்திரங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்டு துறைசார் அமைச்சர்களால் நாடாளுமன்றில் பதில் வழங்குவதற்காக இதுவரை ஏழு கேள்விப்பத்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் ஐந்து கேள்விப் பத்திரங்களுக்கான பதில்கள் துறைசார் அமைச்சர்களால் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மிகை ஊழியர் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் சிக்கல் தொடர்பான இந்தக் கேள்விக்கு பதில் வழங்குவதற்கு தற்போது இரண்டு வாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே பகுதியளவில் கட்டப்பட்டு கட்டி முடிக்கப்படாத பாடசாலைக் கட்டடங்கள் தொடர்பான கேள்வியும் இதேபோல் இரண்டு முறை எடுக்கப்பட்டு இவ்வாறு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதோடு, மூன்றாவதும் இறுதியுமான முறையாக அடுத்த சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.