பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்.!
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது துணைவியார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவத்தை முன்னிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:“சட்டத்தரணி மற்றும் அவரது துணைவியார் படுகொலை செய்யப்பட்டமை, நாட்டின் சட்ட ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்ற சூழலில், இப்பாதகச் சம்பவம் தொடர்பில் நியாயமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.
நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்களை கட்டுப்படுத்தத் தவறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அதற்குப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விலக்கிக் கொள்ள வேண்டும்.மேலும், நாட்டிலுள்ள சட்டத்தரணிகளின் பாதுகாப்பை அரசு துரிதமாக உறுதிப்படுத்த வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.