ஊழலற்ற, போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்க தகுதியான அரச சேவை அவசியம் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து!
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், டிஜிட்டல் மயமாக்கல், போதைப்பொருள் அற்ற தேசம் உருவாக்குதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு, உயர் திறனும் தகுதியும் கொண்ட அரச சேவை அவசியமாகும் என குறிப்பிட்டு, இதற்காக அதிகாரிகளைத் திறம்படத் தயார்படுத்தும் ஐடெக் புலமைப்பரிசில் செயற்றிட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறினார்.
இந்த கருத்தை அவர், இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்ட தினத்தின் முன்னிலையில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக உரையாற்றும் போது வெளியிட்டார். அவர் மேலும், 2024 ஆம் ஆண்டில் 40 அதிகாரிகள், 2025 ஆம் ஆண்டில் 45 அதிகாரிகள் பயனடைந்துள்ளார்கள்.இந்த ஆண்டில் இதுவரை 3 அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் வழங்கப்பட்ட பயிற்சிகள், அதிகாரிகளின் பார்வையை விரிவுபடுத்தி, நாட்டிற்கு புதிய நம்பிக்கை, உலகளாவிய பார்வை மற்றும் சிறந்த பொதுச் சேவை திறனுடன் திரும்பச் செய்யும் திறன் அளிக்கிறது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு போன்ற துறைகளில் மேலதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், இத்தகைய திறமையான அதிகாரிகள் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு அவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் ஐடெக் திட்டத்தினூடாக பயிற்சி பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

