துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.!
தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என இராணுவத்தின் முன்னாள் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் சிறப்பாக நிர்வகிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:“தேசிய பாதுகாப்பிற்கு தற்போது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் சில குழுக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தவும், இனவாதப் பதற்றங்களைத் தூண்டவும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. சில தரப்பினர் தமக்கென ஒரு அரசியல் பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆயுதப்படைகள் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி வருகின்றன. ஒன்று அல்லது இரண்டு தனிநபர்கள் தொடர்புடைய தனித்த சம்பவங்களை முன்னிறுத்தி மக்கள் பீதியடையத் தேவையில்லை. அவை தேசிய பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு இல்லை.கொழும்பு போன்ற நகரங்களில் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், மோட்டார் சைக்கிள்களில் வந்து நடத்தப்படும் திடீர் தாக்குதல்களை முழுமையாகத் தடுப்பது சவாலானது. எனினும், இத்தகைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய மற்றும் துல்லியமான புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.