நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; ஐவர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுணாகொட்டுவ – கலுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.
கலுகமுவ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாங்குளம் – ஏ09 வீதியில் ஜேர்மன் டெக் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 57 மற்றும் 62 வயதுடையவர்கள் எனவும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
வவுனியா நோக்கிச் சென்ற கார், அதே திசையில் சென்ற உந்துருளியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய கண்டி வீதியில் சியம்பலாப்பே சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெலிமடை – மீராவத்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பண்டாரவத்தை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று பெற்றோல் நிரப்பு நிலையம் நோக்கித் திரும்பும்போது, எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பதுளை நோக்கி சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தகெட்டிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.