தோற்றவர்களின் தேர்தல் கோஷங்களுக்கு பணியமாட்டோம்.!
மாகாண சபைத் தேர்தலைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், உரிய முறைப்படி அவை நடத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விடுத்த சவாலுக்கு பதிலடி கொடுத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசின் மீதான மக்கள் செல்வாக்கை அளவிடுவதற்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றும் அவசியமில்லை. கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் மக்கள் வழங்கிய தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே இந்த அரசு இயங்கி வருகின்றது. லக்ஷ்மன் யாப்பா போன்றோர் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்கவே இத்தகைய சவால்களை விடுகின்றனர்.
மாகாண சபைத் தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, முறையான ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தவே நாம் திட்டமிட்டுள்ளோம். இதில் எவ்வித அரசியல் காலதாமதமும் இல்லை.
கடந்த கால ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சியினர் தற்போது தேர்தல் கோஷத்தை எழுப்புகின்றனர்.
எமது முதன்மை நோக்கம் நாட்டைப் பொருளாதார ரீதியாகவும், ஊழலற்ற நிர்வாக ரீதியாகவும் கட்டியெழுப்புவதாகும். அதற்குத் தடையாக இருக்கும் எவ்வித அழுத்தங்களுக்கும் அரசு பணியாது.” – என்றார்.