கூட்டாட்சித் தீர்வு விவாதம்: தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பை நிராகரித்த தமிழரசு – கஜேந்திரகுமாருக்கு சிவஞானம் பதில்.!
அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘ஏக்கிய இராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு வரைவினை நிராகரித்து, கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபம் வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ் மக்கள் தேர்தல்கள் தோறும் சமஷ்டி தீர்விற்கே ஆணை வழங்கி வருவதாகவும், 2015–2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பு வரைவினை தற்போதைய அரசு நிறைவேற்ற முனைவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி தீர்வை முன்னிறுத்த தமிழ்த் தரப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.இதற்கு பதிலளித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஒற்றையாட்சி வரைவு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக குறித்த கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்தார்.
அதேசமயம், ஒற்றையாட்சி முறையை முழுமையாக எதிர்ப்பதிலும், சமஷ்டி முறையை வலியுறுத்துவதிலும் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசு புதிய அரசமைப்பை நோக்கி நகரும் இந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியாக ஒன்றிணைவதில் மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளன என்பது இந்தச் சம்பவம் மூலம் வெளிப்படுகிறது.
எனினும், நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
