சமிந்த குமார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.!
வஸ்கடுவ பகுதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் திகதி வஸ்கடுவ பகுதியில் நடைபெற்ற மரணச்சடங்கு ஒன்றின் போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் துறையால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் பல தவணைகளில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதியினால் நீதிமன்ற மண்டபத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டதுடன், மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.