கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
களுத்துறை – ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்கஹவில வீதியில் மிதெல்லமுலஹேன பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹொரணை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.
தல்கஹவிலயிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த உந்துருளி முன்னால் பயணித்த மற்றுமொரு உந்துருளியை முந்திச்செல்ல முற்பட்டபோது, அந்த உந்துருளியுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் உந்துருளிகளின் சாரதி மற்றும் பயணி இருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, உந்துருளியின் பின் இருக்கையில் பயணித்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.