பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு; பாற்சோறு சமைத்து கொண்டாட்டம்.!
இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்டத் மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய 1750 ரூபாய் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.
1750ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நிகழ்வு இன்று (12) மாலை கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றது.
இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்கிய நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியினை வெளியிட்டதோடு நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
இதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களாகிய நாங்கள் ஒவ்வொரு முறையும் சம்பள அதிகரிப்பினை பெறுகின்ற போது வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே இதுவரை காலமும் காணப்பட்டது.
இலங்கை நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் எட்டு ஜானாதிபதிகள் இருந்த காலப்பகுதியிலும் எங்களுடைய சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை ஆனால் 09 ஆவது ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க வந்தவுடனே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1750 ரூபாய் சம்பளத்திற்கு பெற்று கொடுத்துள்ளார் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

