வடக்கு மாகாணத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தின் கீழ், இவ்வருடம் 2 ஆயிரத்து 726 மில்லியன் ரூபா செலவில் 1,363 புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் அதிகாரிகளுக்கு தேவையான பணிப்புரைகளை வழங்கினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், திட்டத்தின் நடைமுறை அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டன.வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 7,306 வீடுகள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 1,363 வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு தலா 2 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள வீடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் மற்றும் மாவட்ட செயலர்கள் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, விசேட தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர்.மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியல் அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு, பகிரங்கமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திட்டத்திற்கான மூலப்பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற சவால்களை கருத்தில் கொண்டு, மிகக் கடுமையான கண்காணிப்பின் கீழ் 6 மாதங்களுக்குள் வீடுகளை நிர்மாணித்து முடிக்க வேண்டும் என அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.யாழ்ப்பாண மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகள், குறிப்பாக நெடுந்தீவு பகுதியில் வீடுகள் அமைக்கும் போது மூலப்பொருட்கள் கடத்துவதற்கான செலவுகள் அதிகரிக்கும் நிலையில், அதற்கான விசேட கவனம் தேவைப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்ட செயலர்கள், மேலதிக மாவட்ட செயலர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












