ஐ.தே.க – ஐ.ம.ச மீண்டும் கை கோர்க்குமா? அரசியலில் புதிய மாற்றத்துக்கு வாய்ப்பு.!
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச) ஒன்றிணைந்தால் நாட்டில் வலுவான கூட்டு எதிரணியை உருவாக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கலந்துரையாடல்கள் சாதகமான திசையில் நகர்ந்து வருகின்றன. இதன் மூலம் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”கட்சியின் அடிமட்ட நிலைமை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
“கிராம மட்டங்களில் முன்பு பிளவுபட்டிருந்த ஆதரவாளர்கள் தற்போது தாமாகவே ஒன்றிணைந்து வருகின்றனர். தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, பொதுநலன் கருதி ஒன்றிணைய வேண்டும் என்பதே ஆதரவாளர்களின் விருப்பமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கைகோர்க்க ஏற்ற சூழல் உருவாகியுள்ளது.”
மேலும் அவர் கூறுகையில்,
“இரு தரப்பும் இணைந்த பின்னர், ஒரே அரசியல் நோக்கைக் கொண்டுள்ள மற்ற தரப்புகளையும் இணைத்து வலுவான பொது எதிரணியை அமைக்க முடியும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அது அவசியமாகிறது.” என வலியுறுத்தினார்.
நீண்டகாலமாகப் பிரிந்திருந்த இவ்விரு பிரதான அரசியல் கட்சிகளும்மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.