வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க மாதாந்த மீளாய்வு கூட்டம் அவசியம் – சுகாதார பிரதி அமைச்சர்.!
வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒருமுறை மருந்துகள் தொடர்பான மீளாய்வு கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பே அவற்றை இனங்கண்டு உரிய தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பிராந்திய கொள்வனவுகள் மூலம் வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை பேணுவதற்கும், அதனை மதிப்பீடு செய்யும் மீளாய்வு கூட்டங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.
எல்லா நேரங்களிலும் தேவையான மருந்து இருப்பை பேணிக்கொள்ள முடிந்தால், மருந்து பற்றாக்குறை காரணமாக உருவாகும் சிக்கல்களுக்கு சாதகமான தீர்வாக அமையும் எனவும் அவர் கூறினார்.மருத்துவ விநியோகப் பிரிவின் மருந்து விநியோக வலையமைப்பை மேலும் சீரமைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
