சாமிமலை ஓல்ட் டன் தோட்ட சாலை அவல நிலை – மக்கள் கடும் அவதி.!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை ஓல்ட் டன் தோட்டத்தின் மின்னா பிரிவிற்கு செல்லும் சுமார் 2.5 கிலோமீட்டர் நீளமான சாலை பல தசாப்தங்களாக சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
வாக்காளர்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோர் தமது அன்றாட தேவைகளுக்காக சாமிமலை மற்றும் மஸ்கெலியா நகரங்களுக்கு, அதேபோல் பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்ல இச்சாலையையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.சாலை மோசமான நிலையில் இருப்பதால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் இதனால் பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சில கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பெற்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனால் தாயும் குழந்தையும் உயிர் ஆபத்தில் சிக்கிய தருணங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
குறித்த சாலையை சீரமைத்து தருமாறு பல முறை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, மலையக மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தாலும், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என ஓல்ட் டன் தோட்ட மின்னா பிரிவு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தருமாறு தற்போதைய அரசாங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் ஆகியோரிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.