ரயில் சேவை தடை: மலையக கிராம மக்கள் கடும் சிரமம்.!
டிட்வா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளால் மலையக பிரதான ரயில் மார்க்கத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பல பகுதிகளில் ரயில் சேவைகள் நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.பராமரிப்பின்றி காணப்படும் சில தண்டவாளப் பகுதிகள் தற்போது பற்றைக் காடுகளாக மாறியுள்ளன. எனினும், அபேவெல – பதுளை மற்றும் நாவலப்பிட்டி – வட்டவளை இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமையான நிலைக்கு திரும்பியுள்ளன.
ரம்புக்கணை முதல் நாவலப்பிட்டி வரையும், அபேவெல முதல் நானுஓயா வரையும் தண்டவாளப் பகுதிகளில் தொடருந்து பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மலையக பிரதான ரயில் பாதை 75 நாட்களுக்கும் மேலாக செயலிழந்துள்ளதால், ரயிலையே பிரதான போக்குவரத்து வழியாகக் கொண்ட கிராம மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தங்களது அன்றாட வருமானத்தின் பெரும்பகுதியை போக்குவரத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நானுஓயா – அபேவெல பாதை சீரமைப்பு நிறைவடைந்ததும், நானுஓயாவில் நிறுத்தப்பட்டுள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி நானுஓயா – பதுளை சேவைகளை முன்னெடுக்க முடியும் என நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பேரிடர் ஏற்பட்டது இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் அவசியமற்றவை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
இதுவரை 173 பேர் காணாமல் போனவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் ‘இறந்தவர்கள்’ என அறிவிக்கப்படமாட்டார்கள் என்றும், 2004 சுனாமி பேரிடரின் நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் உயிரிழந்ததன் பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 6,431 பேர் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். மேலும், 45,056 குடும்பங்களைச் சேர்ந்த 155,255 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்நிர்மாணப் பணிகளும் நிவாரண உதவிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.