பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் கொடூரமானது புதிய சட்ட வரைவு.!
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் பெயரிலான புதிய சட்ட வரைவு ஒன்றை அநுர அரசு முன்மொழிந்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் போராட்டங்கள் மூலம் பதவியிறக்கப்பட்ட போது, போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மீண்டும் அத்தகைய மக்கள் எழுச்சிகள் உருவாகாமல் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு, பழைய சட்டத்தை விடவும் மிக மோசமான சரத்துக்களுடன் இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்படுகின்றது.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1979 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது வெறும் 6 மாத காலத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாகும். ஆனால், 1982 இல் அது ஒரு நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், போர் முடிந்த பின்னரும் நீக்கப்படவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக உள்ளது.
இதன் காரணமாகவே அரசு பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர முயல்கின்றது.
ஆனால், இந்தப் புதிய வரைவு பழைய சட்டத்தை விடப் பல மடங்கு கொடூரமானது.
புதிய சட்ட வரைவு மிகவும் மோசமாக இருப்பதால், மக்கள் அனைவரும் அதனை எதிர்த்துப் போராடுவார்கள். அந்த எதிர்ப்பின் விளைவாக அரசு புதிய வரைவை வாபஸ் பெற்றால், தானாகவே பழைய ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ நடைமுறையில் நீடிக்கும்.
பழைய சட்டத்தைத் தந்திரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசு இவ்வளவு மோசமான புதிய வரைவை முன்மொழிந்துள்ளதோ என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.” – என்றார்.