சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினிகளுடன் இருவர் கைது.!
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான கிருமிநாசினிகள் மற்றும் விதைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (09) ஹெம்மாத்தகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரி செலுத்தப்படாமல் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட இந்தக் கிருமிநாசினிகள் மற்றும் விதைகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹெம்மாத்தகம பகுதியில் உள்ள ஒரு இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்த இரகசியத் தகவல் கற்பிட்டி விமானப்படைத் தளத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்தது.
அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கேகாலை நாரம்பத்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான கிருமிநாசினிப் பொருட்கள் மற்றும் விதைகள் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 45 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹெம்மாத்தகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.