சுவிஸ் தூதரகம் முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சி தற்காலிகமாக இடை நிறுத்தம்.!
இலங்கையின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்புகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில், கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த விசேட சந்திப்பு தற்காலிகமாக காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்கவிருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு, குறித்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் தூதரக அதிகாரிகள் இன்று காலை அறிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்த் தரப்புகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியாக சுவிஸ் தூதரகம் இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.
இந்நிலையில், அதே நாள்களுக்கு முன்னதாக, 15ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற சந்திப்பொன்றை நடத்துவதற்கான முயற்சியை தமிழ்த் தேசிய பேரவை மேற்கொண்டதாக அறியப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்கவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரசியல் கட்சிகளுடன் பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அந்தக் கூட்டத்திற்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்த இணைமுயற்சி தொடர்பான செய்திகள் இன்று காலை வெளிவந்த பின்னணியில், சுவிஸ் தூதரகம் தனது முயற்சியை உடனடியாக தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கட்சிகளை அமைதியாகவும் குழப்பமின்றியும் ஒரே மேடையில் ஒன்றிணைக்க சுவிஸ் தூதரகம் விரும்பிய நிலையில், விவகாரம் பொதுமக்கள் மத்தியில் வெளிப்பட்டமை அந்தத் தீர்மானத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அறியப்படுகிறது.