செம்மணி மனிதப் புதைகுழியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்.!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பலமுறை கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமடைந்தன.
இந்நிலையில், புதைகுழிக்குள் தேங்கியிருந்த சுமார் 90 ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான மழைநீர் பவுசர் வாகனத்தின் மூலம் வெளியேற்றப்பட்டது.
மழைநீர் அகற்றப்பட்ட பின்னரும், புதைகுழி சேற்றுத் தன்மையுடன் காணப்படுவதால் அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்காக வழக்கு அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் சட்டத்தரணிகள் நிரஞ்சன், ஞா. ரஜித்தா உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதற்கிடையில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், இவ்வாண்டிற்கான புதிய பாதீடு சமர்ப்பித்து நிதியை மீளப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.