வடமராட்சி கிழக்கில் காணி அபகரிப்பு; மக்கள் எதிர்ப்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு குடத்தனை வடக்கு, பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் தனியார் ஒருவருக்கு கோல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றையதினம் குறித்த தனியார நிறுவனத்தால் மணற்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடனான கலந்துரையாடல் மணற்காட்டில் இடம்பெற்றது.
இதில் குறித்த தனியார் நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்காக விருப்பம் கோரியபோது குறித்த பிரதேச மக்கள் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்,
தமது மணற்காடு கிராமத்தில் தற்போது 450க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இதில் 150 பேருக்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி இல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசித்து வருவதாகவும், தமது கிராமத்தை சூழவுள்ள பகுதியில் 156 ஏக்கர் காணி மட்டுமே உள்ளது என்றும் இதனால் தமது கிராமத்தில் கணி இல்லாதோருக்கு காணிகள் வழங்க இருக்கின்ற அரச காணிகள் போதாத நிலை உள்ளதாகவும், இதனாலேயே தமது எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி குறித்த பகுதியில் காணிகள் வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் குறித்த தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது மக்கள் எதிர்க்கின்றனர். இதனால் மக்களின் எதிர்ப்பை மீறி தமது கோல்வ் மைதானத்துடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையங்களை அமைக்கும் பணியை தொடர போவதில்லை என்றும் தெரிவித்தனர்.



