வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள்.!
“மாகாண சபைத் தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசு விரைந்து செயற்பட வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹா – திஹாரிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு மக்களுக்காக மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டும்.
நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது.
இதற்காக, கிராமிய மட்டத்தில் எமது அரசியல் குழுக்களைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.” – என்றார்.





