சர்வதேச தொழுநோய் தினம்: களுவாஞ்சிக்குடியில் விழிப்புணர்வு வீதி நாடகம்.!
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை முன்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
தொழுநோயைத் தடுக்கும் முறைகள் மற்றும் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.மேலும், தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.