வடக்கு மாகாண நெல் உற்பத்தியை மாகாணத்திலேயே அரிசியாக்க நடவடிக்கை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!
வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல், பிற மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அரிசியாக மாற்றப்பட்ட பிறகு மீண்டும் வடக்கு மாகாணத்திற்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகளும் நுகர்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையை மாற்றி, நெல் உற்பத்தியை மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்காக தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.நேற்று மாலை, ஆளுநர் செயலகத்தில் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.ஆளுநர் கூறியதாவது:
“எமது மாகாணத்தின் தேவைக்கு மேலாக நெல் உற்பத்தி செய்யப்படுகிறதில்லை. உபரியான நெல்லை வெளியே அனுப்புவது தவறல்ல; ஆனால் உள்ளூர் மக்களின் தேவைக்கு தேவையான நெல்லையும் வெளியே அனுப்பிவிட்டு அதையே மீண்டும் அதிக விலையில் வாங்குவது ஆரோக்கியமில்லை. உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்குப் போதிய கடன் வசதிகளை வழங்கி, அவர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்து இங்கேயே அரிசியாக மாற்றுவதே நமது நோக்கம்.
“விவசாயிகள் அறுவடை செய்யும் காலத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் போதிய பணம் தேவைப்படுவதாகவும், வங்கிக் கடன்கள் அக்காலத்தில் தாமதமாக கிடைக்கின்றன எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த அறுவடை காலத்திற்குள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அரிசி ஆலைகளுக்குப் போதிய உலர்த்திகள் இல்லாமை மற்றும் களஞ்சிய வசதிகள் குறைவாக உள்ளதைத் திருத்த, எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட நடவடிக்கை எடுத்துள்ளது.விவசாயிகள் முற்றிலும் அறுவடை செய்யும்போது தரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதால், நெல் அறுவடை மற்றும் நவீன நெல் நடுகை முறைகள் பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர், அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.


