முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்களது வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனையாகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்றையதினம் (02) களவாடப்பட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இருக்கின்ற குப்பை கொட்டுகின்ற பகுதியில் களவாடப்பட்ட மாடு ஒன்று வெகனார் வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் வெகனார் வாகனத்துடன் மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவை சேர்ந்த குமார் லக்சன், கலையரசன் மற்றும் முள்ளிவாய்க்காலை சேர்ந்த செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் இவர்களை இன்று(03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரி தி.ஜனன் குறித்த பகுதியில் மேலும் நான்கு மாடுகளின் மண்டை ஓடுகள் காணப்பட்டதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்த நிலையில் குறித்த மூவரையும் 10.02.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












