தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் அணிதிரள்வோம்.!
தமிழ் இனப் பரம்பலைச் சிதைக்கும் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக அனைவரும் இன்று வவுனியா – நெடுங்கேணியில் அணிதிரள வேண்டும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“படிப்படியாக நாங்கள் காணிகளை இழந்து வருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் பெரியளவு காணிகள் இழக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திலும் இந்த விடயம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது – நடக்கின்றது.
அனைத்து தமிழ் மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அரசுக்கு எமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.” – என்றார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கரிநாள் போராட்டங்களிலும் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.