மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி.!
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனத்தின் சக்கரம் காற்றுபோன நிலையில், கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த வானுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி பின்னர் மற்றுமொரு வானுடனும் மோதியுள்ளது.
இதன்போது முதல் விபத்தில் சிக்கிய வான் தடம்புரண்டுள்ளது. வானில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் பிரதேச மக்களின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர்.
இதன்போது விபத்துக்குள்ளான மற்றைய வானின் சாரதி விபத்தை தவிர்க்க முயற்சித்த போதிலும், குறித்த வானும் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் வானில் பயணித்தவர்களும் சிறு காயங்களுடன் வெளியேறினர்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு 1990 இலக்க சேவையை பெற்றுக்கொள்ள அழைத்தபோது, குறித்த சேவையை அணுக முடியாத நிலையில், 021 2 285329 இலகத்திற்கு அழைத்து கிளிநொச்சி வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவையை தருமாறு ஊடகவியலாளர் உதவி கோரினார்.
இதன்போது தம்மால் சேவையை வழங்க முடியாது எனவும், 1990 சேவைக்கே மீண்டும் மீண்டும் அழைக்குமாறு கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவ்வீதி ஊடாக பயணித்த தேர்தல்கள் திணைக்கள வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்களில் காயமடைந்தவர்கள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


