அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
கூட்டம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் ஊடக அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
ஊடக அறிக்கை
வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2011ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவிருந்த “கிவுல் ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தை எந்தவிதமான மீளாய்வுமின்றி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளமையானது தமிழ் மக்களுக்கு அதிலும் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது.
மேற்படி திட்டத்தை நிறுத்தக்கோருவது தொடர்பான கூட்டம் நேற்று (24.01.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக எதிர்வரும் 30ஆம் திகதி (30/01/2026) வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை காண்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.












