இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!
நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் டயர் சந்திக்கு அருகில், நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளி ஒன்று, பேருந்தின் பின்புறத்தில் மோதியதில், உந்துருளி ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு பின்னால் வந்த லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநர், கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் இம்புல்கொட பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்து மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
கிரிபத்கொட பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவன்தன வீதியிலிருந்து குருலுபொத்த பிரதான வீதியை நோக்கி மரங்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உழவு இயந்திர சாரதி, ஹசலக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பரவர்தனஓயா பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.