அரச நிதியில் வடக்கில் ‘காட்சி அரசியல்’ நடத்துவதை தேசிய மக்கள் சக்தியினர் நிறுத்த வேண்டும் – சி.வி.கே. சிவஞானம்.!
தேசிய மக்கள் சக்தியினர் அரச நிதியை பயன்படுத்தி வடக்கு மாகாணத்திற்கு வந்து ‘காட்சி அரசியல்’ நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பிலோ, கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலோ தேசிய மக்கள் சக்தியினர் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தரப்பினர் தலையிடுவதோ, கட்சியை விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
மேலும், மக்கள் மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்த வேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியினரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஆனால், அந்தக் கூட்டங்களுக்கு ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புகள் விடப்படவில்லை.அதேபோன்று, அழைக்கப்பட்ட சில நிகழ்வுகளிலும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மாறாக, அரச நிதியை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பி. கட்சியினரே அந்த நிகழ்வுகளில் பிரதானமாக பங்கேற்றுள்ளனர்.
அரச நிதியை பயன்படுத்தி வடக்கில் தேசிய மக்கள் சக்தியினர் ‘காட்சி அரசியல்’ நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, என்.பி.பியினர் வடக்கு மாகாணத்திற்கு வந்து ‘ஷோ’ காட்டும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.இந்த விடயங்களை ஜனாதிபதி உரிய கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இந்த அரசு தமது அரசியல் நோக்கங்களுக்காக எமது கட்சியை விமர்சிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்விவகாரங்களை நாங்களே கையாளுவோம்” என அவர் தெரிவித்தார்.