உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் கீழான தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான உலக வங்கியின் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (19.01.2026) மாலை நடைபெற்றது.

நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வமாக மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது,

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மாகாணம் மீளக்கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்குச் சவாலாக உள்ளது.

எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சுற்றுலாவிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

எமது மாகாணத்தின் மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும். இங்கேயே அவற்றைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம்.

உலக வங்கியின் ‘புத்துயிர்’ (REVIVE) திட்டத்தின் முதல் கட்டத்தில் யாழ். மாவட்டம் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களும் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன. எனவே, ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி எமது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் விரும்புகின்றோம், என ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன்போது மாவட்டச் செயலாளர்களால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

முல்லைத்தீவு: கொக்கிளாய் பாலம் அமைத்தல்.

கிளிநொச்சி: நீர் விநியோகத் திட்டம் மற்றும் பூநகரி கௌதாரிமுனைச் சுற்றுலா வீதிப் புனரமைப்பு.

மன்னார்: வீதிப் புனரமைப்பு மற்றும் மன்னார் தீவின் வடிகாலமைப்பு மேம்பாடு.

வவுனியா: வடக்கின் நுழைவாயிலான வவுனியாவின் வன்னேரிக்குளம் சுற்றுலாத் திட்டத்தை உள்வாங்குதல்.

யாழ்ப்பாணம்: தெரிவு செய்யப்பட்ட திட்டங்களை விரைவுபடுத்தல்.

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள், ‘வடக்கு மாகாணத்திலிருந்து நியாயப்பாடுகளுடன் கூடிய சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் உலக வங்கித் திட்டங்களை மாற்றியமைக்க முடியும். எனினும், இவை கடன் நிதிகள் என்பதால், முதலீட்டுக்குரிய நற்பேறுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தேவைப்பாடுகளை சரியாக அடையாளம் கண்டு மிகச் சிறந்த திட்டங்களை முன்வைக்கும்போது அரசாங்கத்தால் கூட நிதி வழங்க முடியும், எனக் குறிப்பிட்டனர்.

மேலும், கிராமிய மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் ‘ரூபன்’ (RURBAN) திட்டம் மற்றும் விவசாயத் துறைசார் திட்டமிடல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கடந்த கால வெளிநாட்டு நிதித் திட்டங்களின் அனுபவங்களைக் கொண்டு, இனிவரும் திட்டங்கள் மாகாணத் தேவைகளைச் சரியாக அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகங்களான இந்திக பிரேமரத்ன (தேசிய திட்டமிடல்), ஜூட் நிலுக்ஷ (தேசிய வரவு-செலவு), சமந்த பண்டார (வெளிநாட்டு வளங்கள்) மற்றும் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0